Sunday, January 16, 2011

இருவினை சேரா இறைவன் - 2

இருவினை சேரா இறைவன் - 2

அவர்களது உரையாடல் தொடர்கிறது….

(அன்று மாட்டு பொங்கல். மாலை நேரம். அந்த ஆசிரியர் எதோ எழுதிக் கொண்டியிருக்கிறார்)

மாணவன்: ஐயா, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

ஆசிரியர்: பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டது இல்லையா?

மாணவன்: ஆமாம் ஐயா. அன்றொரு நாள் இருவினைப் பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள்? இல்லையா? அந்த கருத்தைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அதற்கு எதிர்வினையாக சில கேள்விகள் கேட்கிறார்கள்?

ஆசிரியர்: எதிர்வினை இல்லையென்றால் தெளிவுக் கிடைக்காது தம்பி. ஒரு கருத்தை எல்லா தளத்திலிருந்தும் புரிந்துக் கொள்ள அவை உதவும். புரிதல் வசப்படும். ஒவ்வொன்றாக கேள் என்னால் முடிந்தவரை விடைக் காண முயல்கிறேன்!

மாணவன்: ஐயா,

“இருள்சேர் இருவினை சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”


இந்த குறளுக்கு பரிமேலழகர் உரை இவ்வாறு சொல்கிறது.

“இருள் சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

விரிவுரையில்,

இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின், அவிச்சையை “இருள்” என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையார் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்.


மணக்குடவரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்.

“மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை, தீவினையென்னுமிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிக் சொற்களைப் பொருந்தினர் மாட்டு".

இவ்விரண்டு உரைகளும் ஒரே பொருளை தருவதாக நான் கருதுகிறேன் ஐயா. தாங்கள் விளக்க முடியுமா?

ஆசிரியர்: நன்று தம்பி. எல்லோர் உரையும் படித்திருக்கிறாய் போலியிருக்கிறது. இந்த குறள் என்றில்லை, கடவுள் வாழ்த்தில் உள்ள மற்ற குறளும் எல்லாருக்கும் மயக்கமே தருகிறது.
கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களில் கடவுளை நேரடையாக விளிக்கும் சொற்றொடர்களை முதலில்ப் பார்ப்போம்.

1.ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. பொறிவாயில் ஐந்தவித்தான்
6. தனக்குவமை இல்லாதான்
7. அறவாழி அந்தணன்
8. எண்குணத்தான்

மற்ற இரு குறள்களிலும் பொதுவாக இறைவன் என்றேக் கூறப்படுகிறது!

மாணவன்: (குறிக்கிட்டு) ஏன் சொற்றொடர்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்? முழுக் குறளையும் எடுத்துக் கொண்டு ஆராயலாமே, ஐயா?

ஆசிரியர்: பொறுமை தம்பி! முழுக் குறளையும் ஆராய்வோம். நான் சொல்வதைக் கேள். பிறகு உன் கேள்விகளை கேள்? சரியா!

மாணவன்: சரி ஐயா! தாங்கள் தொடருங்கள்.

ஆசிரியர்: எந்த ஒரு நூலாசிரியரும் தான் வழிப்படும் கடவுளைரைத் தான் பாடுவாரேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும், மற்ற பாட்டுகளில் மற்ற சமயக் கடவுளரை பாடியதாக எங்ஙனமும் அமையவில்லை. அதனால் கடவுள் வாழ்த்தில் கூறப்படுபவர் எந்தக் கடவுள் என்று அந்த சொற்றொடர்களை ஆராய்ந்து, பின் முழுக் குறளையும் பார்க்கலாம்.

அந்தச் சொற்றொடர்களை ஆயும் முன்னர், தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்களின் கூற்றை சிறிதுப் படித்துவிட்டு மேற்செல்லலாம். என்னை?

”ஒவ்வொன்றற்கும் புறமும் அகமும் இருத்தல்போலச் சமயத்துக்கும் புறமும் அகமும் இருக்கின்றன. சமயத்தின் புறத்தை நோக்கும்[போது பன்மைக் காட்சியும், அதன் அகத்தை யுணரும்போது ஒருமையுணர்வுந் தோன்றும். புறப் பன்மையைச் சமயவாதிகள் சமயங்கொண்டு கலாம் விளைக்கிறார்கள்”

இங்கே புறம் என்பதை புறச்சான்றுகள் (External Evidences) என்றும் அகம் என்பதை தத்துவம் (Philosophy) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.புறச் சான்றுகள் என்ற வகையில், எல்லா சமயங்களுக்கும் (பெளத்தம், சைவம், வைணவம்) பொதுமையுண்டு. இதை வைத்து நாம் எல்லோரும் வாதம், பிரதிவாதம் செய்கிறோம். ஆனால் அகத்தை உணரும்போதுதான் சமயங்களின் ஒருமைத் தன்மை வெளித் தெரிகிறது. இந்தியச் சமயங்களில் புறத் தன்மைகள் ஒன்றுபோலவே அமையும். ஆனால், அவற்றின் அகத் தன்மையில் அவைகள் மாறுப்பட்டேயிருக்கும். காட்டாக, வினைக் கொள்கைகள் எல்லா இந்தியச் சமயங்களுக்கும் பொதுவேயாயினும் அவை சமணத்திற்கே உரிய சிறப்புக் கோட்பாடு.

புறத்தன்மையை (External Evidences) எடுத்துக் கொண்டாலும் சமண இலக்கியங்களில்தான் மேற்சொன்ன சொற்றோடர்கள் 3:1 என்ற விகிதத்தில் அவைகள் விரவி வருகின்றன. அவ்வகையில் பார்த்தாலும் அவைகள் சமணம் சார்ந்தேயிருக்கின்றன என்பது அங்ஙகை நெல்லிக் கனி.
அகத்தன்மைக்குள் புகும் முன் தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்கள் சொல்வதைப் பார்த்துவிட்டு முன் செல்வோம்.

”திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஒரிடத்தில் ஒரு திறவு வைத்துள்ளார். அதற்கு அரணாக நூலினுள் பல குறிப்புக்களுண்டு. “பொறிவாயில் ஐந்தவித்தான்:” என்பது அத்திறவு. அத்திறவு கொண்டு கடவுள் வாழ்த்தைத் திறந்து பார்த்தல் வேண்டும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஒருபோது பொறி வாயில் ஐந்துடையானைக் குறித்தல் வெள்ளிடைமலை. முதலில் பொறி வாயில் ஐந்துடையனாயிருந்து, பின்னை அவ்வைந்தவித்த ஒருவனைத் திருவள்ளுவர் “ஆதிபகவன்” என்று போற்றியிருக்கிறாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குவ தொன்று. பொறி வாயில் ஐந்துடையனாய்ப் பின்னை அவ்வைந்தவித்த ஒருவனை ஆதிபகவனாகப் போற்றுவது எச்சமயம்?

எங்கும் நீக்கமற நிறைந்து அசைவற்ற ஒன்றை ஜைநம் மறுக்கின்றதில்லை. அவ்வசைவற்ற ஒன்று ஐந்தொழில் புரியா தென்பது ஜைந சித்தாந்தம். “உற்பத்தியு நாசமும் ஒன்றுமில்லாத பரஞ்சுடரே” என்பது ஜைநர் திருநூற்றந்தாதி.

எங்கும் நிறைந்த அசைவற்ற ஒன்றை ஜைநமும் ஏற்கிறது; சைவமும் ஏற்கிறது. ஜைநம் அசைவற்ற ஒன்றிற்கு ஐந்தொழில் கூறுவதில்லை. சைவம் பரம்பொருளுக்கு இருநிலை வகுத்து, ஒன்றற்கு ஐந்தொழிலின்மையும், மற்றதற்குத் தொழிலுண்மையுங் கூறுகிறது. அவ்விருநிலை சொரூபம் தடத்தம் என்பன. பொரூப சிவத்துக்கு ஒன்றுமில்லை. “சிவனரு வுருவுமல்லன் சித்தினோட சித்துமல்லன் – பவமுதற் றெழில்களொன்றும் பண்ணிடுவரனுமல்லன்” (சைவ சாத்திரம்). தடத்த சிவத்துக்கு ஐந்தொழிலுண்டு.

தடத்த சிவத்தைப் “பொறிவாயில் ஐந்தவி ஆதிபகவனாகக் கோடலாகாதோ வெனில், சைவ சாத்திர முறைப்படி கோடலாகா தென்க. பிறவியெடுத்தல், பொறிவாயில் ஐந்து பெறல், பின்னே அவைகளை அவித்தல் முதலியன பசு விலக்கண மெனச் சைவ சாத்திரஞ் சாற்றுகிறது. தடத்த சிவத்தையும் பசு வர்க்கத்தில் சைவ சாத்திரஞ் சேர்த்ததில்லை. ஆதலால் திருவள்ளுவர் வழுத்திய ஆதிபகவனைத் தடத்த சிவமாகக் கோடற்கு மிடமில்லை யென்க. கடவுளியலில் ஜைநமும் சைவமும் பிரியுமிடமிதுவாகும்.”


இவ்வாறு அகத் தன்மையில் பார்த்தாலும் மேற்சொன்ன சொற்றொடர்கள் சமண சமயத்திற்கு இயைந்தேயிருக்கின்றன!. என்னை?

பொறிவாயில் ஐந்தவித்தான் சிவனை, திருமாலைக் குறிக்கும் என்று வாதிட்டு போர்த்துறை நண்ணுவது மடமையாம். என்னை?

கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடர்கள் மனிதனாகப் பிறந்து, பின்னை இறைவனாக உயர்ந்த ஆன்மாவைக் குறித்தே சொல்கிறதேயன்றி எல்லாம் வல்ல பெரும்பொருளை அவைகள் குறிக்காது.

(ஆசிரியர், தன் பேச்சைச் சிறிது நிறுத்துகிறார்)

மாணவன்: ஆகா, நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஐயா! தற்போது முழுக்குறளையும் விளக்க வேண்டுகிறேன்?

ஆசிரியர்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.
இதில் ஒன்றை நுணுகியாராய்ந்துப் பார்த்தல் நன்றமையும் தம்பி.

குறளாசிரியர் ”இறைவன் புகழ் புரிந்தார் மாட்டு”, அதாவது “இறைவனுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து” என இறைவனது கீர்த்தியைச் சொல்லாமல், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்” என விதந்துக் கூறுவதினால், இறைவனால் அருளப்பட்ட அறத்தை விரும்பினவரிடத்து (அவர் வழி சென்றவரிடத்து)காதி, அகாதி வினைகளான இருவினையும் சேராது என்பது அக்குறளின் கருத்து.

இவற்றை ஒட்டியே யசோதர காவியம்,

“இருள்புரி வினைகள் சேரா இறைவன் அறத்தை எய்தின்..”

என்றும்,

“இருள்புரி உலகஞ் சேரா வியநெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகங் காண்பார்”

என்றும் வருவதைக் காணலாம்.

மாணவன்: அற்புதமான விளக்கம். நேரம் ஆகிவிட்டதால் பிறிதொரு நாளில்
மீண்டும் உரையாடுவோம் ஐயா!

ஆசிரியர்: நன்று தம்பி. அப்படியே ஆகட்டும். சென்று வா!
(மாணவன் விடைபெற்று வீடு திரும்புகிறான்)

தொடரும்…

இரா.பானுகுமார்,
சென்னை

3 comments:

R.DEVARAJAN said...

மிக நன்று;

வள்ளுவர் கூறும் இறைமையின் குணம் நான்காவது ’ வேண்டுதல் வேண்டாமை இலான்’ என இருத்தல் வேண்டும்


தேவ்

Banukumar said...

நன்றி தேவ் ஐயா!

திருத்திவிட்டேன்!

இரா.பா,
சென்னை

Sakthi said...

காதி, அகாதி வினை என்றால் என்ன?